Thursday, 28 April 2016

வானவில்லில் இசை

வானவில்லை வளைத்து கவி 
வரிகளை வைத்து நாண் கட்டினேன்... 

வஞ்சி அவள் குனிந்து உவமை 
வழங்கவே தன நாணம் காட்டினாள்.... 

மீட்டிய இசை காதல் - அது 
காட்டிய ஸ்வரம் இன்பம் - மனம் 
மாட்டிய சிறை இவள் நகை - அடடா 
மனம் மயக்குகிறாள் நறுமுகை....!!
வானவில்லை வளைத்து கவி 
வரிகளை வைத்து நாண் கட்டினேன்... 

வஞ்சி அவள் குனிந்து உவமை 
வழங்கவே தன நாணம் காட்டினாள்.... 

மீட்டிய இசை காதல் - அது 
காட்டிய ஸ்வரம் இன்பம் - மனம் 
மாட்டிய சிறை இவள் நகை - அடடா 
மனம் மயக்குகிறாள் நறுமுகை....!!

இதய தசையின் இசை

உனது எண்ணங்களை 
எட்டிப் பிடித்து - அதற்கு 
முத்தமிட்டு முழுமை செய்ய 
துடிப்பதே எனது எண்ணமாம் 

நீ நினைக்கும் நினைவை 
தொட்டுப் பார்த்து - அதற்கு 
மெட்டமைத்து இசைக்க 
முயல்வதே எனது இதயமாம் 

நமை படைத்தவன் பாதத்தை 
பாறையில் செதுக்கி - அதற்கு 
பாதுகாப்பாய் அவனையே 
சிலையாக்குவதே உலக மனிதமாம் 

துளி காதலும் பிடித்த எனக்கும் 
காதலே துளியும் பிடிக்கா உனக்கும் 

கடவுளுமில்லை ... 
காதலுமில்லை ... 

சரி விடு .. 

உனது விருப்பம் போல் 
காதல் ஏதுமில்லை .... 

எனது விருப்பத்தை 
புதைத்தது போல் 
மறைத்து விட்டுப் போகிறேன் ... 

மற்ற தசையின் இசையும் 
இதய தசையின் இசையும் 
ஒன்றல்ல எந்தன் உயிரில் 

ஓர் புல்லாங்குழல் இசை

**** கிளம்பிச் சென்ற பேருந்தை 
**** பிடிப்பதற்காக ஓடி வந்து 
**** பெரு மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறாய் 
**** என்னருகே நீ.... 

**** அருகில் இருப்பவர்களுக்கு 
**** தெரிந்திருக்க வாய்ப்பில்லை 
**** ஓர் புல்லாங்குழல் இசைப்பது 
**** என்னை தவிர...

கிராமிய இசை

மண்ணோடும் மண்ணின் மணத்தோடும் 
விதையோடும் விதையின் துளிர்ப்போடும் 
வரப்போடும் வரப்பின் ஈரப்பதத்தோடும் 
பயிரோடும் பயிரின் வாசத்தோடும் 
இழையோடி விளையாடும் எங்கள் இசை.. 
இசைக்கு மூத்த இசை எங்கள் கிராமியத் தேனிசை..! 

வண்டியோடும் தாளத்திலும் 
காளைகளின் கொம்பு மணி ஓசையிலும் 
லாடக் குளம்புகளின் லயத்தினிலும் 
பால் வேண்டி கத்துகின்ற 
பசுக்கன்றின் நா அசைவிலும் 
பிறந்து வரும் பிறவி இசை எங்கள் கிராமியத் தேனிசை...! 

இயல் இசை நாடக முத்தமிழ்

இசை பாடும் குயில் ஒன்று 
மலர்த் தோட்டத்தில் நுழைந்தது 
பூக்கள் மலராத தோட்டத்தில் 
வாய்மூடி மௌனமாய் இருந்தது 
கவி எழுத கணினியுடன் நான் நுழைந்தேன் 
கவின் மொட்டுக்கள் இதழ் பிரித்து மலர்ந்தது 
தென்றல் ஆடிவர மகிழ்ச்சியில் இசைக் குயில் பாடிட 
இளவேனில் வண்ணமலர்த் தோட்டம் 
இயல் இசை நாடக முத்தமிழ் ஆனது ! 

மின்னல் -- இசை

ஹாரிஸ் ஜெயராஜ்! 

மின்னலே----! 

மின்னலுடன் இசையை ஒலிக்க வைத்தார்! 
வசீகர இசையை....! 
பொழிந்தது அவர் மீது புகழ் மழை!

பறை --தமிழன் இசை

பரணியால் புகழ்ந்தோரும் 
தலை குனிந்தே மடிந்தோரும் 
சமத்துவம் பெறும் 
கூற்றுவன் இசை இது 

ஆயிரம் இசைக்கருவி 
ஒலிசெய்து ஓய்ந்தாலும் 
ஆவி ஓய்ந்தபின்பும் ஒலிசெய்யும் 
ஆதி இசை பறை 

முன்யென்மம் முடிக்கையிலே -காதில் 
முணுமுணுத்த ஓசை இது 
எவர் இதயம் இறந்தபின்பும் 
அழுகின்ற இதயம் இது 

இருதய இசைக்கருவி 
இசைக்கும் வரை மனித ஆட்டம் 
இதை உரக்க சொல்லும் 
அதிர்வு இது 

ஆதியிலே ஊரறிய 
சேதி சொன்ன நாதம் இது 
வீதியிலே போட்டுவிட்டான் 
சாதியென பெயர் எழுதி 

பாறையாய் மாறிவிட்ட 
சாதிய மனங்கள் எல்லாம் 
சாம்பலாய் ஆகட்டும் 
இந்த பறை ஒலியினிலே 

இசையோடு வாழ்ந்து வரும் 
எம்தமிழர் பரம்பரையில் 
கிராமிய கலையென்று 
கடைத்தெருவில் ஒதுக்கிவிட்டோம் 
எம் தமிழ் கலைஞர்களை 

நகருமா மனிதம் 
மனிதனை தேடி ????

இயற்கை எனும் இசை மன்றம் - இயற்கை

ஒருகாலை ஆரம்பம் ஓர்கவிதை ராகம் 
ஒருமாலை ஓவியம் ஓர்காத லின்கீதம் 
ஓர்தென்றல் பாடல் இளவேனில் இன்னிசை 
ஓர்இசைமே டைஇயற்கை நீ 

ஒருகாலை ஆரம்பம் ஓர்கவிதை ராகம் 
ஒருமாலை ஓவியம் ஓர்காத லின்கீதம் 
ஓர்தென்றல் பாடல் இளவேனில் இன்னிசை 
ஓர்யிசைமன் றம்இயற்கை நீ 

----கவின் சாரலன் 

----இன்னிசை வெண்பாக்கள் 
இரண்டாவதில் ஈற்றடியில் சிறிது மாற்றம்

இசை - காதல் கவிதை

அலங்கார தோரணங்களால் 
காற்று மண்டலத்தில் 
கவிதை சிலைகளை 
அமரவைத்து அழகு பார்க்கும் 
நந்தவன தேர் 

புத்தகத் தீவுகளில் 
அடிமைகளாகிக் கிடந்த வரிகளை 
விடுதலையாக்கி 
தென்றல் சாகர வீதிகளின் வழியே 
கரையேற்றும் படகு. 

துயிலும் வாத்தியங்களின் 
தூக்கம் களைகையில் 
எழும்பும் ஈனஸ்வரங்கள் 

வாத்திய கிளைகளில் 
அமர்ந்திருக்கும் 
உருவமில்லா பறவைகள் 
இசைவேடர்களின் 
விரலம்புகள் பட்டதும் 
சிறகடித்து பறந்து மனித மரத்து 
செவிக்கூட்டுக்குள் ஒளிந்துகொள்கின்றன 

இசை

காற்றை நுரைக்க வைக்கிறாய்
காயப்பூக்கள் பூப்பிக்கிக்கிறாய்
வெறுமை நிரப்புகிறாய்
மாயைக்குள் மெய்யாகிறாய்

கடவுளர்க்கு நிஜம் சொல்கிறாய்
மிருகங்களுக்குக் கனவு தருகிறாய்
தாவரங்களின் தலை கோதுகிறாய்
மேகங்கள் பீச்சுகிறாய்

மூங்கிலில் வண்டு செய்த
புண்ணில் பண்ணிசைக்கிறாய்
பிறையை வளர்ப்பிக்கிறாய்
விண்மீன்கள் தூங்கவைக்கிறாய்

எங்கள்
மனப்பாறை இடுக்குகளில்
தேன்கூடு கட்டுகிறாய்

உன் வருகைக்கு எங்கள்
கண்ணிமைகள் தாழ்ந்து
கம்பளம் விரிக்க

கண்ணீர் ஆங்காங்கே
திரவமலர் தெளிக்க

புல்லரிக்கும் உரோமங்கள்
எழுந்து நின்று வரவேற்க

உனக்குத்தான் எத்தனை
ராஜமரியாதை இசையே!